ஈரோடு அருகே விபத்து; கணவன்-மனைவி, மகன் பரிதாப சாவு

ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி, மகன் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-06-04 06:05 GMT
ஈரோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 40). இவர் சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தங்கமணி (37). தட்டச்சு பணியாளர். இவர்களுடைய மகன் யதுரிஷ் (12). இவன் பிச்சாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கந்தசாமி தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு, தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவருடைய புதுமனை புகுவிழாவிற்காக ஈரோடு அருகே உள்ள ஆனைக்கல்பாளையத்துக்கு நேற்று வந்தார். பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் இவர்கள் சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கந்தசாமி, தங்கமணி, யதுரிஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கந்தசாமி, தங்கமணி, யதுரிஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் பலியான சம்பவம் உற வினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்