சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு: புதுச்சேரிக்கு ரூ.247¾ கோடி மத்திய அரசு ஒப்புதல்

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக புதுச்சேரிக்கு ரூ.247¾ கோடி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-06-06 00:38 GMT
புதுச்சேரி,

புதுவையில் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்க பொது நிதியை பயன்படுத்த கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் இதனால் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கவர்னர் கிரண்பெடி மீது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொது நிதி என்பது அரசு ஊழியர்களின் பணம். அது அரசுக்கு சொந்தமானது அல்ல. அந்த பணத்தை எடுத்து மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்க அரசு ஒப்புதல் கேட்டது. ஆனால் அந்த பணத்தை டெபாசிட் செய்து விட்டு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்று சம்பளம் வழங்க கவர்னர் அலுவலகம் கூறியது. நம்பிக்கையின் அடிப்படையில் வைத்திருக்கும் நிதி திசை திருப்பப்படாததை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது புதுவை யூனியன் பிரதேசத்திற்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு தொகை ரூ. 247 கோடியே 75 லட்சம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது புதுவை யூனியன் பிரதேசத்தின் நிதிச்சுமையை குறைக்கும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்