திருவொற்றியூரில் பிரசவத்தின்போது இளம்பெண் பலி: குழந்தையும் இறந்தே பிறந்தது

திருவொற்றியூரில் பிரசவத்தின்போது இளம்பெண் பலியானார். குழந்தையும் இறந்தே பிறந்தது. டாக்டர்கள் கவனக்குறைவால் இளம்பெண் இறந்ததாக உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-07 00:10 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மேற்கு பகுதி ஜோதி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் கணேசலிங்கம். தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரபா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேலாகிறது. திருமணமான 4 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மேலும் வரதட்சணை மற்றும் விவாகரத்து தொடர்பாகவும் வழக்கு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரபா கர்ப்பமானார். எனவே குழந்தை பிறந்து விட்டால் இருவரும் சமாதானமாகிவிடுவார்கள் என அவர்களது உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியான பிரபா, நேற்று பிரசவத்துக்காக திருவொற்றியூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரபாவுக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அடுத்த சில மணி நேரங்களில் ரத்தப்போக்கு அதிகரித்து பிரபாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாவும் உயிரிழந்தார்.

டாக்டர்கள் போதிய கவனம் செலுத்தாததே பிரபாவின் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி பிரபாவின் உடலை பெற உறவினர்கள் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்து போலீசார் பிரபாவின் இறப்புக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பிரபா உடலை பெற்றுக்கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்