பல்லாரி அருகே கபடி வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை - கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

பல்லாரி அருகே கபடி வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

Update: 2020-06-09 00:53 GMT
பல்லாரி,

பல்லாரி மாவட்டம் ஹரப்பனஹள்ளி அருகே கொங்கனகொசூரு கிராமத்தை சேர்ந்தவர் காயத்திரி (வயது 20). இவர், தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். காயத்திரியின் தந்தை விவசாயி ஆவார். காயத்திரி கபடி வீராங்கனை ஆவார். அவர் தாவணகெரேயில் உள்ள ஒரு கிளப்புக்காக முதலில் விளையாடி வந்தார். தற்போது மராட்டியத்தை சேர்ந்த ஒரு அணிக்காக விளையாடி வந்தார். நேபாளத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டு சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பரிசு வென்றிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காயத்திரியின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த காயத்திரி திடீரென்று விஷத்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடினார். வீட்டுக்கு திரும்பிய காயத்திரியின் பெற்றோர் தங்களது மகள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காயத்திரி இறந்துவிட்டார்.

இதுபற்றி அறிந்ததும் ஹரப்பனஹள்ளி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று காயத்திரியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக தனது தந்தையிடம் காயத்திரி பணம் கேட்டுள்ளார். ஆனால் தற்போது பணம் இல்லை, விவசாய பணிகளை மேற்கொள்ள தான் பணம் இருப்பதாக காயத்திரியிடம் அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மன வேதனையில் இருந்து வந்த காயத்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஹரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்