உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் முக கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம்

உளுந்தூர்பேட்டையில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்த 200 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2020-06-10 04:06 GMT
உளுந்தூர்பேட்டை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக நகர்புறங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் பெரும்பாலானோர் அரசு உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் நகர்புறங்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களில் ஆய்வு செய்து முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி பஸ் நிலையம், கடைவீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் முக கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த 200 பேருக்கு அதிகாரிகள் தலா 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல தனியார் வங்கிகள் மற்றும் மளிகை கடைகள் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றிருந்த பொது மக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் பேரூராட்சி பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 12 கடைகளின் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்