கொரோனா தடுப்பு நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை கலெக்டர் அலுவலகம் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

Update: 2020-06-13 22:30 GMT
கோவை,

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசுத்துறை அலுவலகங்கள் உள்பட தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு அலுவகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று கோவையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வழங் கல் துறை, ஆதிதிராவிடர்நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம் உள்பட ஏராளமான அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்களில் அனைத்து பகுதிகளிலும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குறிப்பாக கதவு, ஜன்னல்கள், கைப்பிடிகள், லிப்ட், தரைப்பகுதி, படிக்கட்டுகள், இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 10 பேர் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்