முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.

Update: 2020-06-15 00:03 GMT
திருச்சி,

தமிழகத்தில், ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வைரசின் கொடூரத்தை உணராமல் பெரும்பாலானவர்கள் முககவசம் இன்றி அலட்சியமாக வலம் வருகிறார்கள். அவ்வாறு முககவசமின்றி சுற்றிதிரியும் நபர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரும், முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். நேற்று மாநகரின் முக்கிய சந்திப்புகளான கண்டோன்மெண்ட், கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி ரூ.500 அபராதம் விதித்தனர். முககவசம் அணியாமல் காரில் வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறிய ஒரு சில வாகன ஓட்டிகளின் வாகன பதிவு எண் கேமரா மூலம் பதிவாகி அவர்களது செல்போனுக்கு அபராதம் விதித்ததற்கான குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது.

மேலும் செய்திகள்