மதுரை, ராமநாதபுரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு

மதுரை, ராமநாதபுரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர்.

Update: 2020-06-20 06:01 GMT
மதுரை,

மதுரை பழங்காநத்தம் வசந்தம் நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் அங்குள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே அவர் அணிந்திருந்த நகையை காணவில்லை எனக்கூறி அவரது குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இதுபோல் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 88 வயது முதியவர் கடந்த 15-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதைதொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்