அர்ச்சகரை பணிநிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் நிர்வாக அலுவலர்- எழுத்தர் கைது

பெரம்பலூரில் தற்காலிக உதவி அர்ச்சகரை பணிநிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோவில் நிர்வாக அலுவலர், எழுத்தர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-22 23:19 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி உள்ள புகழ்பெற்ற மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு மரகதவல்லித்தாயார் சன்னதியில் தற்காலிக உதவி அர்ச்சகராக சக்கரவர்த்தி பட்டாச்சாரியார் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சக்கரவர்த்தியை பணி நிரந்தரமாக்குவதற்காக கோவில் நிர்வாக அலுவலர் மணி ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

அதற்கு கோவில் எழுத்தர் புகழேந்தி உடந்தையாக இருந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தவணையாக, ரசாயனம் தடவப்பட்ட ரூ.20 ஆயிரத்தை சக்கரவர்த்தியிடம் கொடுத்தனர். போலீசாரின் ஆலோசனைப்படி சக்கரவர்த்தி, அந்த பணத்தை கோவில் நிர்வாக அதிகாரியிடம் நேற்று கொடுத்தார்.

கைது

அப்போது மறைந்திருந்த பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் கோவில் அலுவலகத்தில் திடீரென்று நுழைந்தனர். அங்கு பணியில் இருந்த கோவில் நிர்வாக அலுவலர் மணி மற்றும் எழுத்தர் புகழேந்தி இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவில் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை சோதனை செய்து, கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். கோவில் அலுவலகத்தில் கணக்கில் வரவு வைக்கப்படாத ரொக்க பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பெரம்பலூரை அடுத்த எசனையில் கோவில் அதிகாரி மணியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும் செய்திகள்