கடத்தூர் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடி திருவிழா பொதுமக்களை போலீசார் விரட்டினர்

கடத்தூர் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களை போலீசார் விரட்டினர்.

Update: 2020-06-23 03:37 GMT
கடத்தூர்,

கடத்தூர் அருகே உள்ள பொதியன்பள்ளம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் நல்லகுட்லஅள்ளி, கடத்தூர், போசிநாயக்கனஅள்ளி ஏரிகளுக்கு வருவது வழக்கம். ஏரிகளில் மழைநீர் தேங்கும்போது பொதுமக்கள் மீன்குஞ்சுகளை வாங்கி ஏரியில் விட்டு வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நல்லகுட்லஅள்ளியில் உள்ள ஏரியில் வளர்ந்த மீன்களை பிடிக்கும் திருவிழா நடைபெற்றது. மீன்களை பிடிப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். ஏரியில் உள்ள தண்ணீரில் வலைகளை வீசி மீன்கள் பிடிக்க தொடங்கினார்கள். மீன்பிடி திருவிழாவை பார்க்க ஏரிக்கரையோரத்தில் ஏராளமானோர் கூடினர்.

விரட்டியடிப்பு

கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி ஏரிக்கரை அருகே பலர் கூடியிருப்பதும், மீன்பிடி திருவிழா நடப்பது குறித்தும் கடத்தூர் போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து போலீசார் ஏரிக்கு விரைந்து வந்தனர். அங்கு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களையும், அதை வேடிக்கை பார்க்க திரண்டவர்களையும் போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்