ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு வங்கிகளின் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் கந்தசாமி கூறினார்.

Update: 2020-06-26 04:34 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பாண்டிற்கான (2020-2021) வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார். அதனை திருவண்ணாமலை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜாராமன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

நபார்டு வங்கி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடப்பாண்டில் ரூ.5,450 கோடிக்கு கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி விவசாய கடன்களாக ரூ.4 ஆயிரத்து 486 கோடியே 65 லட்சம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.290 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி கடனாக ரூ.60 கோடியே 75 லட்சம், வீட்டு கடனாக ரூ.302 கோடியே 50 லட்சம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்களுக்கு ரூ.9 கோடியும், சமூக உள்கட்டமைப்பு கடன்களுக்கு ரூ.31 கோடியும், இதர துறைகளுக்கு ரூ.270 கோடியே 10 லட்சம் கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டறிக்கை

அதைத்தொடர்ந்து இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய 2019-2020-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையையும் கலெக்டர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மகளிர் திட்ட உதவி இயக்குனர் ஜான்சன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுந்தரவதனம், தாட்கோ திட்ட மாவட்ட மேலாளர் ஏழுமலை, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் மந்தாகினி மற்றும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்