கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-06-26 23:07 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). ஆட்டோ டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் அந்த ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடை முன்பு சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நேற்று காலை தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணிக்கு கடன் தொல்லை அதிகம் இருந்ததும், தற்போது போதுமான வருமானம் இல்லாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சக ஆட்டோ டிரைவர்கள் டவுன் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்