கொரோனா தடுப்பு பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது விழுப்புரத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா தடுப்பு பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2020-06-27 02:00 GMT
விக்கிரவாண்டி,

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களை கேட்டறிந்ததோடு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், நலப்பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் சாந்தி மற்றும் டாக்டர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2,100 படுக்கை வசதிகள் தயார்

பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்ட 695 பேரில் இதுவரை 430 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 265 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர்வரும் எந்த சூழலையும் சமாளிக்கும் விதமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையிலும் சேர்த்து 1,000 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியோடு தயார் நிலையிலும், கூடுதலாக சிறப்பு மையங்களில் 1,100 படுக்கைகளும் என மொத்தம் 2,100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

40 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்

இங்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள மைக்ரோ பயாலஜி ஆய்வகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களையும் சேர்த்து 35 ஆயிரம் ஆர்ட்டிபிசியன் டெஸ்ட் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து, வைரசை துரத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நிலைபாட்டில் நாம் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அதிகளவில் மருத்துவ பரிசோதனைகளை செய்துள்ளோம். உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் நோயில் இருந்து தமிழகத்தில் மட்டும் இதுவரை 40 ஆயிரம் பேரை எவ்வித மருந்தும் இல்லாமல், ஊசியும் இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம்.

தமிழக அரசு, முதல்-அமைச்சர் தலைமையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பாதிப்படைந்தவர்களை குணப்படுத்தியும், பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் அவர்களை தனிமைப்படுத்தியும், நோய் எப்படி வந்தது என கண்டறியும் பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்