தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2020-06-27 23:20 GMT
தரகம்பட்டி,

தரகம்பட்டி அருகே உள்ள மத்தகிரி ஊராட்சி, குள்ளரெங்கம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சாந்தி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில், கடந்த 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாந்திக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமானும் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்