அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரக்கோணம் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி

அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரக்கோணம் மூதாட்டி உள்பட 2 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியானார்கள்.

Update: 2020-06-28 05:31 GMT
ராணிப்பேட்டை,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 335 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மருத்துவமனையில் கடந்த 23-ந்தேதி வேலூர் கஸ்பா ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த 57 வயது தொழிலாளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று காலை அவரின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தொழிலாளி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரின் உடல் அரசு விதிகளின்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மூதாட்டி சாவு

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்