வேலூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 110 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,110 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர் ள்பட 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-28 06:38 GMT
வேலூர்,

வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பாகாயத்தை சேர்ந்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடன் பணிபுரிந்த டாக்டர்கள், நர்சுகள், அவருடைய குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேபோன்று அதே தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் கொணவட்டம், சேண்பாக்கம், சின்ன அல்லாபுரம், முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களும், தொரப்பாடி, வேலப்பாடி பகுதியை சேர்ந்த சிலரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் 36, 44 வயது பெண்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

1,110 ஆக உயர்வு

வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, பிஷப் டேவிட் நகரில் 7 வயது பெண் குழந்தை, 12 வயது சிறுவன், சத்துவாச்சாரியில் 16 வயது சிறுவன், வசந்தபுரம் பர்மா காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் நேதாஜி மார்க்கெட், மண்டி தெருவில் கடை வைத்துள்ள வியாபாரிகள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்