கொரோனா ஊரடங்கு காலத்திலும் மத்திய அரசின் திட்டத்தில் வீடு கட்டும் பணி தீவிரம்

கொரோனா ஊரடங்கு காலத்திலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டத்தில் வீடு கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-06-28 23:42 GMT
நெல்லை,

மத்திய அரசு கிராமப்புற மக்கள் அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இந்த திட்டம் பிரதம மந்திரி வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

நெல்லை, தென்காசி மாவட்டத்துக்கு 7,450 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 6,700 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. மீதி உள்ள 750 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) இறுதிக்குள் வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து பணிகளும் முடக்கப்பட்டன. கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணி, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

தற்போது மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் திட்டப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போல் உள்ளது. அந்த திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு கிராமப்புறங்களில் குடியிருக்க வேண்டும், மத்திய அரசின் சமூக பொருளாதார கணக்கெடுப்பில் ஆன்லைனில் பதிவு செய்து இருக்க வேண்டும். இதுதான் மத்திய அரசு நிபந்தனை. இந்த தகுதி உள்ளவர்கள் மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு நபருக்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் வரை மானியம் கொடுக்கப்படுகிறது. இந்த பணம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், சலுகை விலையில் சிமெண்டு, இரும்பு கம்பிகளும் வழங்கப்படுகின்றன. கதவு, ஜன்னல்களும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 600 வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மந்திராட்சலம் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்திலும் கிராமப்புற மக்களுக்கு வீடு கட்டித்தர மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளது. முதல்கட்டமாக 2 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளோம். தற்போது 500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கு 3 ஆயிரத்து 600 பயனாளிகளை தேர்வு செய்து வருகிறோம். அதற்கான தேர்வு நடந்து வருகிறது. மத்திய அரசின் திட்டத்தில் வீடு கட்ட விரும்பும் தொழிலாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்.

தற்போது நடைபெற்று வரும் பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது. மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து பணி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்