டாக்டர், போலீஸ்காரர் உள்பட 47 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,123 ஆக உயர்வு

கடலூர் மாவட்டத்தில் டாக்டர், போலீஸ்காரர் உள்பட 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-02 22:20 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் டாக்டர், போலீஸ்காரர் உள்பட 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,123 ஆக உயர்ந்துள்ளது.

உமிழ்நீர் பரிசோதனை

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,076 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 730 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 40-க்கும் மேற்பட்டவர்களின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் டாக்டர், போலீஸ்காரர் உள்பட 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த ஜவுளிக்கடை ஊழியரின் பரிசோதனை முடிவில் அவருக்கும் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

விருத்தாசலத்தை சேர்ந்தவர் 58 வயது ஜவுளிக்கடை ஊழியர். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரை உறவினர்கள், சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

டாக்டர், போலீஸ்காரர்

முன்னதாக கொரோனா பரிசோதனைக்காக அவரிடம் இருந்து உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன் பரிசோதனை முடிவு நேற்று தான் வந்தது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் டாக்டர், விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர், ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த மருத்துவமனை ஊழியர், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த லேப் டெக்னீசியன் ஆகியோருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று வந்ததில் டாக்டர் உள்பட 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 கர்ப்பிணிகள்

இதேபோல் சென்னையில் இருந்து கடலூர் வந்த 3 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து பரங்கிப்பேட்டை வந்த ஒருவர், பெங்களூருவில் இருந்து வடலூர், நல்லூர் பகுதிகளுக்கு வந்த 10 பேர், நெல்லை, மேற்குவங்காளத்தில் இருந்து வடலூர் வந்த 2 பேர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 கர்ப்பிணி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,582 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. நேற்று மட்டும் 50 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்