காதலியை பார்க்க சென்றபோது 45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் படுகாயம்

சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னியப்ப தெருவைச் சேர்ந்தவர் ஜிலான்(வயது 22). செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.

Update: 2020-07-08 22:15 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னியப்ப தெருவைச் சேர்ந்தவர் ஜிலான்(வயது 22). செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஒரகடம் சாலையில் வசிக்கும் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வரும் வழியில் அவரது காதலியின் வீடு இருப்பதால், நள்ளிரவில் காதலியை பார்க்க அவரது வீட்டுக்குள் சத்தமின்றி நுழைந்தார்.

அப்போது யாரோ வரும் சத்தம்கேட்டு பயந்துபோன அவர், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது அங்கு தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு காதலி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஓடிவந்தனர்.

பின்னர் அம்பத்தூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, படுகாயம் அடைந்த நிலையில் இருந்த ஜிலானை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்