கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Update: 2020-07-11 02:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவர் கடந்த 8-ந்தேதி மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக கூறி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் செல்போன் கடை நடத்தி வரும் 57 வயதுடைய ஆணுக்கும், கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கரூர் கே.வி.பி. நகரை சேர்ந்த 52 வயதுடைய ஆணுக்கும், குளித்தலை தாளியாபட்டியை சேர்ந்த 61 வயது பூ வியாபாரிக்கும், கரூர் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் என மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஏற்கனவே 55 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்