தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த கார் மீது லாரி மோதல்; 3 வாலிபர்கள் பலி

விராலிமலை அருகே தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த கார் மீது லாரி மோதியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-07-12 02:27 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மிதுன்கிஷோர்(வயது 23). இவரும், இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணனின் மகன் அரவிந்த்(23), ராசுவின் மகன் பரத் (23) ஆகியோர் நேற்று ஒரு காரில் கொடும்பாளூர் சத்திரத்தில் இருந்து விராலிமலை நோக்கி வந்தனர்.

கொடும்பாளூர் சத்திரத்தை அடுத்துள்ள வடகாட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது கார் மோதி கவிழ்ந்தது. அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, கார் மீது மோதி காரின் மீதே கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி, நசுங்கியது.

இதில் காரில் இருந்த மிதுன் கிஷோர், அரவிந்த், பரத் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு மற்றும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்