மனைவிக்கு கொரோனா அறிகுறி: காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

இண்டூர் அருகே மனைவிக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் மனமுடைந்த காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-07-14 07:39 GMT
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள அதகப்பாடி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் தர்மபுரியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய 60 வயது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை சுகாதாரத்துறை அலுவலர்கள் வீட்டில் தனிமைப்படுத்தினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வந்த காவலாளி மனைவிக்கு கொரோனா அறிகுறி இருப்பதும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்