எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் முதன்மைக்கல்வி அதிகாரி வழங்கினார்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் வழங்கினார்.

Update: 2020-07-16 04:46 GMT
நாகர்கோவில்,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஜூலை மாதத்தில் பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கப்படும். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்குவது தாமதமாகி வருகிறது.

இதற்கிடையே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம் தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

வினியோகம்

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த இலவச பாட புத்தகங்கள் வினியோகத்தை முதன்மைக்கல்வி அதிகாரி ராமன், மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகனன், முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன், பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) கிறிஸ்டபல் மேரி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜாகீர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பாடப்புத்தகங்கள் வினியோகம் தொடங்கியது.

30,500 மாணவர்கள்

குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் 14 ஆயிரத்து 500 பேருக்கும், பிளஸ்-2 மாணவர்கள் 16 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 30 ஆயிரத்து 500 மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் தெரிவித்தார்.

இதேபோல் பிளஸ்-2 மாணவ மாணவிகள் வீடியோ மூலம் பாடம் கற்கும் வகையில் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள லேப்-டாப்களில் ‘வீடியோ லெஸ்சன்“ என்ற ஆன்லைன் செயலியும், அந்தந்த பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்