நாளை ஆடி அமாவாசை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

ஆடி அமாவாசை தினம் நாளை அனுசரிக்கும் நிலையில் ஊரடங்கினால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறார்கள்.

Update: 2020-07-19 05:14 GMT
கன்னியாகுமரி,

இந்துக்களின் முக்கிய விஷேச நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை (திங்கட்கிழமை) வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வீடுகளில்

இதனால் இந்துக்கள் நாளை வீட்டிலேயே குளித்து தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறார்கள். முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, வடை பாயாசத்துடன் உணவு பதார்த்தங்களை படைத்து வைத்து வழிபடுகிறார்கள். 

மேலும் செய்திகள்