நடத்தையில் சந்தேகம்: சகோதரியை கொன்று உடலை எரித்த 3 பேர் கைது - மேலும் ஒரு சகோதரனுக்கு வலைவீச்சு

சகோதரியை கொடூரமாக கொலை செய்த 3 சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2020-07-22 21:56 GMT
தானே,

தானே மாவட்டம் தைகர் பகுதியை சேர்ந்த பெண் பிரதீபா மாத்ரே(வயது 29). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து பெற்று தனது சகோதரர்கள் 4 பேருடன் வசித்து வந்தார்.

மேலும் அவர் அங்குள்ள பீர் பாரில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பிரதீபா மாத்ரேயின் நடத்தை மோசமாக இருப்பதாக சகோதரர்கள் உணர்ந்தனர். இது தொடர்பாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை வீட்டில் இருந்து வெளியேறி தனியாக வசிக்குமாறு வலியுறுத்தினர்.

ஆனால் பிரதீபா மாத்ரே அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த மே மாதம் 1-ந் தேதி இரவு பிரதீபா மாத்ரேவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி அருகில் உள்ள வயல்வெளிக்கு எடுத்து சென்று விறகு, டயர் மற்றும் மண்எண்ணெயை பயன்படுத்தி எரித்தனர். இதைத்தொடர்ந்து எரிந்த உடல்பாகங்களை அங்குள்ள ஓடையில் வீசி உள்ளனர்.

நாட்கள் பல கடந்த நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில் குட்டு அம்பலமானது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் சகோதரர்களான நாதா அசோக் பாட்டீல்(31), பகவான் அசோக் பாட்டீல்(24), பாலாஜி அசோக் பாட்டீல்(20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு சகோதரரான பாண்டுரங் அசோக் பாட்டீலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்