திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியில் கிராம ஊராட்சிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியில் கிராம ஊராட்சிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-07-23 00:36 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, 121 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.6 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மின்கலத்தால் இயங்கக்கூடிய 275 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திர வாடகை மையம் திறந்து வைத்தல், 38 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் என ரூ.8 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, புதியதாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட டிராக்டரில் அமர்ந்த அமைச்சர் பெஞ்சமின் அதனை சிறிது தூரம் ஓட்டி ஆய்வு மேற்கொண்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்