வேலூர் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி கொலை மகன் கைது

வேலூர் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளியை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-24 22:15 GMT
அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமம் வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு சாந்தி (வயது 55) என்ற மனைவியும், ஜீவா (28) என்ற மகனும் உள்ளனர். தவமணி தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சாந்தியிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தவமணி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்து, சாந்தியிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த ஜீவா, தந்தையை தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த ஜீவா அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து, தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி கீழே விழுந்த தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், இறந்துபோன தவமணியின் பிணத்தை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை அதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் நேற்று காலை 9 மணி அளவில் வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்