மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க எதிர்ப்பு

மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-24 23:36 GMT
மூலக்குளம்,

புதுவையில் கொரோனா பாதித்தவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்படுகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன்படி 100 அடி ரோட்டில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். இதற்கு சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தநிலையில் எல்லைப்பிள்ளை சாவடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முன் நேற்று மாலை திரண்டனர். அப்போது, குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான முடிவுக்கு எதிராக சமூக இடைவெளி கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கொரோனா நேரத்தில் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்