கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவரை அரிவாளால் வெட்டிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டினர்.

Update: 2020-07-26 23:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது39). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த பொற்செல்வன் (33), சிறுதலை காட்டை சேர்ந்த ஐயப்பன் (24), ராமச்சந்திரன் (34) ஆகிய நான்கு பேரும் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் தமிழக கடற்கரை பகுதியில் சுமார் 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், படகில் இறங்கி மீனவர் பாரதிதாசனை அரிவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டினர். மற்ற 3 மீனவர்களையும் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதை தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் படகில் கரைக்கு திரும்பினர். இதையடுத்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுகாட்டுத்துறை மீனவர்களை கடற்கொள்ளையர்கள், தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்