கொரோனாவால் உயிரிழந்த முதியவர் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் மோசடி ஊழியர் உள்பட 4 பேர் கைது

கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் வங்கிக்கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்த ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-27 20:11 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணம் முறைகேடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வங்கி மேலாளர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவரின் அலுவலகத்தில் கடந்த 15 ஆண்டாக வேலை பார்த்து வந்த ஊழியர் சாபிக் சேக் தான் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

4 பேர் கைது

இவர் தனது கூட்டாளிகளான சுவப்னில், பிரித்தேஷ், அர்சத் ஆகியோரின் உதவியுடன் இறந்த முதியவரின் வங்கிக்கணக்கில் இருந்து போலி சான்றிதழ் மற்றும் அவரின் ஆதார் கார்டு மூலம் கோடிக்கணக்கிலான பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் சாபிக் சேக் கொரோனாவினால் உயிரிழந்த மற்றொரு நபரின் வங்கிக்கணக்கிலும் பணத்தை மோசடி செய்ததாக ஜூகு போலீசில் புகார் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தகிசர் குடிசை பகுதியில் பதுங்கி இருந்த அவரின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்