கயத்தாறில் மதுபாட்டில் கேட்ட தகராறில் பயங்கரம்: மீன் வியாபாரி அடித்துக்கொலை 2 பேரிடம் போலீஸ் விசாரணை

கயத்தாறில் மதுபாட்டில் கேட்ட தகராறில் மீன் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-07-28 00:05 GMT
கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆரோக்கியமாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனம் (வயது 47). இவர் கயத்தாறு காவலர் குடியிருப்பு அருகில் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

இவருடைய மனைவி அந்தோணி ஆரோக்கிய மேரி. இவர்களுக்கு அந்தோணி ராஜ் என்ற மகனும், மேரி, அமிர்தகனி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

மது கேட்டதில் தகராறு

நேற்று முன்தினம் முழு ஊரடங்கை முன்னிட்டு, கயத்தாறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இரவில் சந்தனம், கயத்தாறு-கடம்பூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் ரூ.100 கொடுத்து, மதுபாட்டில் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் சந்தனத்துக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது சந்தனத்தை சிலர் அடித்து உதைத்து தாக்கினர்.

2 பேரிடம் விசாரணை

இதனை அறிந்த சந்தனத்தின் உறவினர்கள் நேற்று அதிகாலையில் அங்கு சென்று சந்தனத்தை வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறிதுநேரத்தில் சந்தனம் மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கயத்தாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே சந்தனம் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக கயத்தாறு அருகே அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் காளிமுத்து, தெற்கு மயிலோடையைச் சேர்ந்த மற்றொரு முத்துபாண்டி மகன் சுடலைக்கண்ணு ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கயத்தாறில் மீன் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்