அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Update: 2020-07-28 00:57 GMT
திருவண்ணாமலை, 

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 1.1.2020-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச்சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tam-i-lv-a-l-a-r-c-h-it-hu-r-ai.com என்ற வலைதளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2,500, மருத்துவப்படி ரூ.500 மற்றும் கட்டணமில்லா பஸ் சலுகையும் அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்