கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி.

Update: 2020-07-28 19:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் நிலைப்பாடுகளை பொறுத்து, அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். புராண காலத்தில் இருந்தே தமிழர்களையும், தமிழர்களின் வரலாற்றையும் வடஇந்தியர்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்த பாகுபாடுதான் ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வரையிலும் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் நகரங்களில் வசித்த தமிழர்கள் புறநகரங்களுக்கு சென்ற நிலையில், வடஇந்தியாவில் இருந்து வந்தவர்கள் நகரங்களை ஆக்கிரமித்துள்ளனர். அவர்களுக்கு ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு‘ திட்டத்தில் ரேஷன் கார்டும் வழங்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் தமிழகத்தில் தமிழர்களைவிட, வடஇந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.

கொரோன வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில், உலகில் பல நாடுகள் தோற்றுப்போன நிலையில், இந்தியா சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதேபோன்று தமிழக அரசும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்த முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்திலும் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கொள்கை பரப்பு செயலாளர் குமாரசாமி, அமைப்பு செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்