பழம்பெரும் இந்தி நடிகை கும்கும் மரணம்

பழம்பெரும் இந்தி நடிகை கும்கும் மரணமடைந்தார்.

Update: 2020-07-28 20:03 GMT
மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகையான கும்கும் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வந்தார். முதுமை காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலை 11.30 மணியளவில் வீட்டில் உயிரிழந்தார். நடிகை கும்குமின் வயது 86.

சாய்புநிஷா என்ற இயற்பெயரை கொண்ட கும்கும் பீகார் மாநிலம் சேக்புரா மாவட்டத்தில் உள்ள ஹூசைனாபாத் ஊரை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 1954-ம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார். சி.ஐ.டி., மிஸ்டர் எக்ஸ் இன் பாம்பே, மதர் இந்தியா, உஜாலா, தில் பி தேரா ஹூம் பி தேரே, நாயா தவுர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

இரங்கல்

நடிகை கும்கும் பிரபல நடிகையாக இருந்த போதும் கூட நல்ல கதாபாத்திரங்களில் துணை வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிகர் தர்மேந்திராவுக்கு சகோதரியாகவும் நடித்து உள்ளார். அதே நேரத்தில் 2 படங்களில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்.

சுமார் 115 படங்களில் நடித்த நடிகை கும்கும் சாஜித் அக்பர் கானை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

மறைந்த நடிகை கும்கும்மின் இறுதி சடங்கு மஜ்காவ் தகன மையத்தில் நேற்று நடந்தது. பழம்பெரும் நடிகையின் மறைவுக்கு பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்