பாலக்கோடு அருகே, விவசாயி வெட்டிக்கொலை - உறவினருக்கு போலீசார் வலைவீச்சு

பாலக்கோடு அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-07-31 22:30 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 51). விவசாயி. இவருக்கு விஜயா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு முத்துகவுண்டன் காடு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக இவருக்கும், இவருடைய உறவினரான கோவிந்தன்(47) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று சண்முகம் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது அங்கு சென்ற கோவிந்தன் அரிவாளால் சண்முகத்தின் கழுத்து மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கோவிந்தன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கோவிந்தனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்