மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தந்தை -மகள் உள்பட 3 பேர் பலி பேரணாம்பட்டு அருகே பரிதாபம்

பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் தந்தை - மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-08-01 23:00 GMT
பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சிந்தகணவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். அவருடைய மகன் நிதீஷ்குமார் (வயது 15), 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனும், தனது உறவினர் பாலகிருஷ்ணன் மகன் தீபக் (13) என்பவனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பேரணாம்பட்டு அருகே செர்லப்பல்லி கிராமத்தில் பேரணாம்பட்டு-குடியாத்தம் சாலையில் வந்த போது, எதிரே பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமம் மந்தைவெளியை சேர்ந்த கார்த்தி (38) என்பவர் தனது 2 மகள்கள் தெய்வானை (10), சந்தியா (11) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் கார்த்தி, தெய்வானை, சந்தியா, தீபக் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கார்த்தி, தெய்வானை ஆகியோர் உயிரிழந்தனர். பின்னர் தீபக், சந்தியா ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்