கல்யாணில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுட்டுக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு

கல்யாணில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-08-02 00:06 GMT
அம்பர்நாத்,

கல்யாண் டவுண் பகுதியை சேர்ந்தவர் ஜிக்னேஷ் தக்கர் (வயது48). ரியல் எஸ்டேட் உரிமையாளர். நேற்றுமுன்தினம் இரவு அவர் தனது ஹவுசிங் காம்ப்ளக்ஸ் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால்அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 4 ரவுண்ட் தோட்டாக்கள் ஜிக்னேஷ் தக்கரின் உடம்பில் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ஜிக்னேஷ் தக்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொன்ற ஆசாமிகளை அடையாளம் காண அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவரது கொலைக்கு தொழில் போட்டி காரணமா? அல்லது முன்விரோதம் காரணமா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்