பாபநாசம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கொரோனாவுக்கு பலி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கொரோனாவுக்கு பலியானார்.
பாபநாசம்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி திருப்பாலைத்துறை மெயின்செட்டித்தெருவில் வசித்து வந்தவர் சேக்தாவூது (வயது58). இவர் பாபநாசம் முன்னாள் பேரூராட்சி மன்ற தி.மு.க. தலைவராக இருந்தவர். மேலும் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு கடந்த 28-ந் தேதியன்று தொடர் காய்ச்சல் இருமல் இருந்து வந்தது. உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கடந்த 29-ந் தேதி நடைபெற்ற சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதையடுத்து டாக்டர்கள் வழிகாட்டுதலின்படி அவரது உடல் நேற்று மதியம் 1 மணியளவில் வருவாய்த்துறையினர், சுகாதார துறையினர், காவல்துறையினர், பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் பாபநாசம் பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.