ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலிலும் ஆடி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

Update: 2020-08-03 01:36 GMT
பூந்தமல்லி,

ஆடி மாதம் அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அம்மன் கோவில்களில் ஒரு ஆண்டு திருவிழா நடத்தப்படவில்லை என்றால் அடுத்தடுத்து தடங்கலாக இருக்கும் என கருதி பல்வேறு அம்மன் கோவில்களில் குறைந்த பக்தர்களுடன் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலிலும் ஆடி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆனால் ஊரடங்கு காரணத்தால் குறைந்த அளவு பக்தர்களுடன் திருவிழா நடத்தப்பட்டது. விழாவில் அம்மனுக்கு ரூ.20, 50, 100, 500 என ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் கோவிலின் முகப்பு முதல் கருவறையில் உள்ள அம்மன் சிலை வரை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதனை அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர். பணத்தை யாரும் எடுத்து சென்று விடாத வகையில் பாதுகாப்புக்கு ஆங்காங்கே ஆட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்