மின்சாரம் தாக்கி பலியான என்ஜினீயரிங் மாணவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி பலியான என்ஜினீயரிங் மாணவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2020-08-06 01:47 GMT
அச்சன்புதூர்,

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே உள்ள கரிசல்குடியிருப்பு கிராமம் பஜனைமட தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் காளிராஜ் (வயது 24).

என்ஜினீயரிங் மாணவரான இவர் நேற்று முன்தினம் மாலை தனது உறவினருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு குளிக்கச் சென்றார். அப்போது பலத்த காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் காளிராஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் ஒப்படைப்பு

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், காளிராஜ் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காளிராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று முன்தினம் தென்காசி அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்று காலையிலும் நீடித்தது. அ.தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் காளிராஜ் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்