தூத்துக்குடியில், விடுப்பு எடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலர்கள் இல்லாமல் கலெக்டர் அலுவலகம், உதவிகலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் ஆகியவை வெறிச்சோடிக் கிடந்தன.

Update: 2020-08-06 02:09 GMT
தூத்துக்குடி,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த இழப்பீடு தொகை ரூ.50 லட்சம் தாமதம் இன்றி வழங்க வேண்டும், கொரோனா பணியின் போது, நோய் தொற்று ஏற்பட்டு உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு உயர்தரமான சிகிச்சை பெற்றிட ரூ.2 லட்சம் வழங்க வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு நோய் எதிர்ப்பு அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 5, 6-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்தும், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

உண்ணாவிரதம்

அதன்படி தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். தூத்துக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் செந்தூர்ராஜன் கோரிக்கையை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேஷ் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஞானராஜ், செல்வக்குமார், ராமச்சந்திரன், பாலசுந்தரம், உமாதேவி மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்கம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்