3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-08-06 02:26 GMT
வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்துறை அலுவலர்களுக்கு அரசு இழப்பீடு தொகையான ரூ.50 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த ஜூன் மாதம் 3 நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

மேலும் அவர்கள், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின...

வேலூர் மாவட்டத்தில் இந்த சங்கத்தில் 204 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், 95 சதவீதம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (வியாழக்கிழமையும்) விடுப்பு எடுத்து போராட்டம் செய்ய உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வருவாய்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் 4 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்தபடி பணிபுரிந்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரின் போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்