வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2020-08-07 01:55 GMT
வாசுதேவநல்லூர்,

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார்.

மேலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் உள்பட 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் நடிகர் கருணாசும் கொரோனாவால் பாதிக் கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனோகரனுக்கு தொற்று

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. மனோகரனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யவும், வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லை வருகிறார். இந்த விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்