உடன்குடி வட்டாரத்தில் அனல்மின் நிலைய ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று

உடன்குடி வட்டாரத்தில் நேற்று அனல் மின் நிலைய ஊழியர்கள் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-08-08 00:18 GMT
உடன்குடி,

உடன்குடி பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று உடன்குடி அனல் மின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் 36,27,40,36,25,23,24,23,31 ஆகிய வயதுள்ள ஆண்கள் மற்றும் 28 வயதுள்ள பெண் ஆகிய 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பரமன்குறிச்சி முந்திரிதோட்டத்தில் 29 வயது ஆண், பொத்தரங்கன் விளையில் 35 வயது பெண், மெஞ்ஞானபுரம் போலீஸ் குடியிருப்பில் 50 வயது மற்றும் 41 வயது பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மெஞ்ஞானபுரத்தில் ஒரே குடும்பத்தில் 14 வயது சிறுமி, 9 வயது சிறுவன், பரமன்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவில் 41 வயது பெண், உடன்குடி காலனியில் 50 வயது ஆண், புதுமனையில் 38 வயது ஆண் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருமிநாசினி தெளிப்பு

இதை தொடர்ந்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசித்த வீடுகள் உள்ள பகுதியில் வட்டார சுகாதாரத் துறையினர் முகாமிட்டு பரிசோதனை நடத்தினர். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 19 பேருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த பகுதிகளில் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்