துபாயில் இருந்து சென்னைக்கு செல்போனில் மறைத்து ரூ.9½ லட்சம் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் வந்த வாலிபர், செல்போனில் மறைத்து கடத்தி வந்த ரூ.9½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-08-09 01:30 GMT
ஆலந்தூர், 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி துபாயில் சிக்கி தவித்தவர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தது.

விமானத்தில் வந்தவர்கள் மருத்துவம், குடியுரிமை சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது(வயது 32) என்பவர் செல்போனில் யாரிடமோ நீண்டநேரமாக பேசிக்கொண்டே வந்தார்.

செல்போனில் ரூ.9½ லட்சம் தங்கம்

சுங்க அதிகாரிகள் சோதனையின்போது அவரது செல்போனை ‘ஸ்கேனிங்’ செய்ய மறுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர்.

அதில் செல்போனின் பின்பக்க கவரில் 6 தங்க நாணயங்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.9 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 198 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக முகமதுவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்