காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடி நிவாரண தொகை - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-10 20:03 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் அரசு உத்தரவின் பேரில், நிவாரண தொகை ரூ.1,000-ஐ கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரத்து 200 பேருக்கு நிவாரண தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.1,000 வீதம் ரூ.1 கோடியே 2 லட்சம் நிவாரண தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ரூ.1,000-ஐ பெறாத மாற்றுத்திறனாளிகள் எவரேனும் இருப்பின் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் அடையாள அட்டை நகல் மற்றும் அசலுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளி மாவட்டங்களைச்சார்ந்த மாற்றுத்திறனாளிகள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தால் அவர்களும் தங்களின் அடையாள அட்டையின் நகலுடன் கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக நிவாரண தொகை கிடைக்க பெறாதவர்கள் விவரங்கள் பெறுவதற்கு 9499933476 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்-அப் தகவல் பெற 8778601525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்