ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்.

Update: 2020-08-13 05:30 GMT
சிவகங்கை,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,719 ஆக இருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,780 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3,271 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவிட் கேர் மையங்களில் 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 130 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 25 பேர் வீடு திரும்பினர். இவர்களை மருத்துவகல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் மீனா, ஒருங்கிணைப்பாளர் சூரிய நாராயணன், உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் முகமதுரபி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காட்டுபரமக்குடியை சேர்ந்த 70 வயது ஆண் மற்றும் நயினார்கோவிலை சேர்ந்த 60 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 55 வயது ஆண், 75 வயது ஆண், மதுரை மாவட்டம் வரிச்சீயூரை சேர்ந்த 60 வயது பெண் ஆகியோர் சிவகங்கைக்கு கொரோனா சிகிச்சைக்கு அழைத்து வரும்போது உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்