பெரம்பலூர் அருகே, திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பெரம்பலூர் அருகே திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-08-13 22:15 GMT
பெரம்பலூர்,

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு யுவன்சங்கர் ராஜா(வயது 21) என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். யுவன்சங்கர் ராஜா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருநங்கையாக (மூன்றாம் பாலினத்தவர்) மாறி விட்டதால், அவர் தனது பெயரை காஜல் என்று மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சக திருநங்கைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காஜல் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் ஒரு வீட்டில் வசிக்கும் அம்மாபாளையத்தை சேர்ந்த மனிஷா(44), எடப்பாடியை சேர்ந்த லவ்வியா(21) ஆகிய திருநங்கைகளுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து மனிஷா ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கவும், லவ்வியா வெளியிலும் சென்று விட்டனர். பின்னர் மதியம் மனிஷா வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் காஜல் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காஜலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை காஜல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்