கோர்ட்டில் வழக்கு நடந்துவரும்போது கோவில் நிலத்தில் மணல் கொட்டியதால் ஆரணியில் மீண்டும் பரபரப்பு

கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் கோவில் நிலத்தில் மணல் கொட்டியதால் ஆரணியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-08-21 07:53 GMT
ஆரணி,

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 1.44 ஏக்கர் காலி இடம் ஆரணி காந்தி ரோடில் காமராஜர் சிலை எதிரே உள்ளது. இந்த நிலத்தை ஜெயராஜ் என்பவர் தனக்கு சொந்தமானது எனவும், தனது உறவினர்கள் முலமாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முர்த்தி, அவரது மாப்பிள்ளை ரியல் எஸ்டேட் அதிபர் ராஜேஷ் ஆகியோர் அந்த நிலத்தை வாங்கியதாக கூறி அந்த இடத்தில் கடந்த மாதம் மணல் கொட்டப்பட்டது. இதனால் அப்போது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆரணி நீதிமன்றத்திலும், சென்னை ஐகோர்ட்டிலும் ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டு ள்ளது. இந்த நிலையில் நிலத்தை வாங்கியதாக கூறப்படும் முர்த்தி, ராஜேஷ், ராஜசேகர், பழனி, பெருமாள் ஆகியோர் நிலம் தங்களுக்கே உரியது என அவர்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் கள்.

மீண்டும் மண் கொட்டியதால் பரபரப்பு

இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் இடத்தில் மீண்டும் திடீரென மொரம்பு மண் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி, கோயில் ஆய்வாளர் நடராசன், தாசில்தார் தியாகராஜன், ஆரணி நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த பொறுப்பாளர்கள், அ.ம.மு.க. கட்சியின் மாநில நிர்வாகியும் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான பொன்னி பாலாஜி உள்பட பலர் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு சம்பந்தப்பட்ட வர்கள் வேறு இடத்தில் கொட்ட சொன்ன மணலை இங்கு கொட்டிவிட்டார்கள். பிரச்சினை வேண்டாம் எனக் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் கோயில் செயல் அலுவலரிடம் தாசில்தார், போலீசார் ஆகியோர் உடனடியாக அந்த இடத்தில் கம்பிவேலி அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள் ளுங்கள் என அறிவுரை வழங்கினர். பிரச்சினைக்குரிய நிலத்தில் மணல் கொட்டியதால் ஆரணி நகரில் நேற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்