கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; தந்தை தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம் பிடித்ததால், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-22 04:56 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள நாரியப்பனூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). இவரது மகள் சரண்யா(19). நர்சிங் படித்துள்ள இவர், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான மணிகண்டன்(28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் சரண்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

இதுபற்றி அறிந்த மணிகண்டனின் மனைவி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சரண்யாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டனுடன், சரண்யா ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த முருகேசன் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம் பிடித்ததால், தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்